மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயருக்கு இடம் அளிக்கப்படாது என தகவல் வெளியான நிலையில் அது உண்மையாக மாறி உள்ளது. 33 வயதாகும் நிலையில் கருண் நாயர் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஆனால், அவரை அணியில் தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவு இல்லை என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அந்த முடிவை புறம் தள்ளி இருக்கிறார்.
தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி என்னும் தேசிய அளவிலான ஒரு நாள் போட்டித் தொடரில் கருண் நாயர் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த 7 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு முறை மட்டுமே அவுட் ஆகி இருக்கிறார். மேலும், ஐந்து சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்தையும் அடித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 752 என்பதாக உள்ளது.

தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என பல தரப்புகளில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டு இருந்தது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருண் நாயரை பாராட்டி இருந்தார்.
ஆனால், கருண் நாயர் கடைசியாக 2017 ஆம் ஆண்டில் தான் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். மேலும், அவருக்கு 33 வயது ஆகிறது. இந்த நிலையில் அவரை ஒரு நாள் அணியில் தேர்வு செய்தால் அது சரியாக இருக்காது என்பதால் அவரை புறக்கணித்து இருக்கிறது தேர்வுக் குழு.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணித் தேர்வில் கருண் நாயர் பெயர் இடம் பெறாதது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அஜித் அகர்கர், 700-க்கும் மேல் பேட்டிங் சராசரி இருந்தாலும், இந்த அணியில் இடம் அளிக்க முடியாது என வெளிப்படையாக கூறினார். இது கருண் நாயருக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றமாக இருக்கும்.