துபாய்: பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் மற்றும் தொடரை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் இன்டெலிஜென்ஸ் பீரோ (Intel) என்ற அமைப்பு கடந்த திங்கட்கிழமை அன்று பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசு பாதுகாப்பு துறைகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் இடங்களில் வெளிநாட்டினரை கடத்துவதற்கு சில தீவிரவாத குழுக்கள் சதி திட்டம் தீட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்களை குறி வைத்து கடத்தல் திட்டம் நடத்தப்படுகிறதா? அல்லது தொடரை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை குறி வைத்து இந்த திட்டம் நடத்தப்படவுள்ளதா? என்ற விவரம் இல்லை.
இந்த எச்சரிக்கை செய்தி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பல ஆண்டுகளுக்கு எந்த அணியும் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டுக்கு மற்ற நாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன.
அதனை ஒட்டி சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடந்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் மூன்று நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய மூன்று நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி முன்னதாகவே பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டியே இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்து இருந்தது.
அதனால், இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்திய அணியின் நிலைப்பாடு சரிதான் என கூறும் வகையில் அச்சுறுத்தல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த எச்சரிக்கையால் இந்த தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மைதானங்களில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 12,000 பாதுகாவலர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.