மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். உலக கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி விளங்கினார்.
நடந்து முடிந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது சமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த நிலையில் அந்த போட்டிக்கு பிறகு முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் முகமது ஷமி கடுமையாக பயிற்சி செய்து வந்தார். தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கிரிக்கெட் மற்றும் சையது முஸ்தாக் டி20 போன்ற பல்வேறு தொடர்களில் ஷமி விளையாடினார். எனினும் ஷமியின் முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாக கூறி அவரை இந்திய அணியில் சேர்க்க மருத்துவ குழுவினர் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் பும்ரா தனி ஆளாக போராடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தினார். மற்ற பவுலர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தாம் இல்லாதது இந்திய அணிக்கு பெறும் பின்னடைவு ஏற்படுத்தி விட்டது என்பதை உணர்ந்த ஷமி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகி வருகிறார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கண்டிப்பாக பங்கேற்று இந்திய அணியின் இழந்த மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமி தீவிர பயிற்சி செய்து வருகிறார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் சமி ஆக்ரோஷமாக பந்து வீசி வரும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.அதில் வேகம், விவேகம் மற்றும் உத்வேகம் அனைத்தும் இருந்தால் உலகத்தை எதிர்கொள்ளலாம் என்று ஷமி பதிவிட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரில் ஷமி 9 விக்கெட்டுகளையும் விஜய் ஹசாரே தொடரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். தன்னுடைய உடல் தகுதியை ஷமி நிரூபித்திருப்பதால் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தன்னுடைய ஃபார்மை ஷமி நிரூபித்து விட்டால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கண்டிப்பாக இடம் பெறக்கூடும்.