கராச்சி: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி பங்கேற்குமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுவரை பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் சிக்கல் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ கூறி உள்ளது.
மேலும், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது பிசிசிஐ. இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொயின் கான் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதுவரை இந்தியாவில் நடந்த சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்று உள்ளது. ஆனால், கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை.

2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில், அப்போது இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பாதி தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டது. அதே போல இப்போதும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஒருவேளை அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா தொடரில் இருந்து விலகினால் தொடரை நடத்தும் பாகிஸ்தானுக்கு விளம்பர வருவாய் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றில் பெருத்த இழப்பு ஏற்படும். இந்த நிலையை சுட்டிக் காட்டி முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆடச் செல்கிறதோ அதேபோல, இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். இதில் மொயின் கான் ஒரு படி மேலே போய் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
அவர் பேசுகையில், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளை இந்தியா மதிக்க வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை என்றால் பாகிஸ்தானும் இனி இந்தியாவில் நடக்கும் தொடர்களில் பங்கேற்காது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பிசிசிஐக்கு அறிவுரை கூறி, அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியா பாகிஸ்தான் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் அது பாகிஸ்தானுக்கு மட்டும் நன்மை அல்ல இந்த விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக நன்மையை அளிக்கும்." என்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான், அந்த அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது என பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில், மொயின் கான் இந்தியாவில் கிரிக்கெட்டையும், அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.
இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்க மறுத்தால் அதனால் அந்த தொடரை நடத்த உள்ள பாகிஸ்தானுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். மறுபுறம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக வரும் டிசம்பர் முதல் தற்போதைய பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா பொறுப்பேற்க உள்ளார். அவர் இந்த விவகாரத்தை எப்படி கையாள்வார் என்ற கேள்வியும் உள்ளது.