துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மறு பிரிவிலும் இந்த தொடரில் சந்திக்கிறது.
இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. துபாயில் முகமது சமியைத் தவிர வேறு எந்த ஒரு வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு பந்து வீசியது கிடையாது. இதனால் பந்துவீச்சில் மோர்னே மோர்க்கலின் வழிகாட்டுதலும் அனுபவமும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

பும்ரா இல்லாத நிலையில் ஆர்ஸ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை மோர்க்கல் பந்து வீச்சுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் மோர்னே மோர்க்கலுக்கு மிகப்பெரிய சோகமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. அதில் மோர்னே மோர்க்கலின் தந்தை காலமானதாக செய்தி வந்ததை எடுத்து அவர் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பி சென்றிருக்கிறார்.
இதனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளில் மோர்னே மோர்க்கல் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மோர்க்கல் இல்லாத நிலையில், முகமது ஷமிதான் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்த வேண்டும்.
மேலும் ரோகித் சர்மா, கம்பீர்,விராட் கோலி போன்றவர்கள் பவுலர்களுக்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்ற திட்டத்தை வகுக்க வேண்டும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறதா? இல்லை வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறதா என்பது குறித்து தகவல் இன்னும் இல்லை. இதனால், இந்திய அணி வரும் வியாழக்கிழமை வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் 40 முறை மோதி இருக்கின்றன. இதில் 32 முறை இந்தியாவும்,எட்டு முறை வங்கதேசமும் வெற்றி பெற்றிருக்கிறது எனினும் கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.