துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் காரணமாக, இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால், இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் பயணிக்க ஒப்புதல் அளிக்காத நிலையில், பிசிசிஐ தரப்பில் ஐசிசி நிர்வாகத்திடம் விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது.

