மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டோம் என இந்தியா அறிவித்துவிட்டது.
மேலும் தாங்கள் விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துமாறு பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்து இருக்கிறது.

இந்தியா வந்து பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து நாங்களும் விலகி விடுவோம் என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் இந்தியா விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாகிஸ்தானில் இருந்து ஒட்டுமொத்த தொடரையும் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றி விடுவோம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்த விவகாரத்தில் புதிய முடிவை எடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 1996 உலகக்கோப்பை தொடர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இலங்கைக்கு சென்று லீக் போட்டியில் விளையாட மாட்டோம் என்று கூறிவிட்டது.
இதனால் இலங்கை அணிக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. அது போல் இப்போது செய்தால் என்ன? இல்லை என்றால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏன் ஒரே பிரிவில் போடுகிறீர்கள்? பாகிஸ்தானை வேறு பிரிவிலும் இந்தியாவை வேறு பிரிவிலும் போட வேண்டியதுதானே? ஐசிசி அதை செய்யவே செய்யாது.
ஏனென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் போட்டிகளில் மோதினால் தான் அதிக அளவு பணம் ஐசிசிக்கு கிடைக்கும். இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இரண்டு புள்ளிகளை கொடுங்கள் என்று பாசித் அலி கூறியுள்ளார்.