கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், அந்தத் தொடருக்கான முன்னேற்பாடுகளின் போது இந்திய தேசியக் கொடியை புறக்கணித்து விட்டதாக சர்ச்சை எழுந்து இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ள மைதானங்களில் இந்திய தேசியக் கொடி நிறுவப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் இந்த சர்ச்சையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றாலும், இந்திய அணி பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்துவிட்டது. அதனால் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்த மூன்று மைதானங்களிலும் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அதில் இந்திய அணியின் கொடி காணப்படவில்லை. அதுதான் சர்ச்சையாக வெடித்தது.
இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்த முடிவை எடுத்ததா? என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா, "உண்மையில் இந்திய அணியின் கொடி அங்கு இல்லையா? ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அது மிகப் பெரிய தவறு" எனவும், தான் விசாரிப்பதாகவும் கூறி இருந்தார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில், "சர்வதேச கிரிக்கெட் அமைப்பு 4 கொடிகளை மட்டும் காட்சிப்படுத்தினால் போதுமானது" எனக் கூறி இருந்ததாகவும், "பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடி, சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் கொடி ஆகியவற்றுடன் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள இரண்டு நாடுகளின் கொடியை மட்டும் காட்சிப்படுத்தினால் போதுமானது" எனக் கூறி இருந்ததாக விளக்கம் அளித்தது.
தற்போது இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள மூன்று மைதானங்களிலும் இந்திய நாட்டின் கொடி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்ற அணிகளின் கொடிகளுடன் இந்திய தேசிய கொடியும் இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 19 (இன்று) முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்க உள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியுடன், நியூசிலாந்து அணி மோத உள்ளது. இந்தப் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெறும்.