கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள், "விராட் கோலி, விராட் கோலி" என கோஷமிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் ரசிகர்கள் எதிரிகளாக பாவிக்கப்பட்டாலும், பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனினும் இதுவரை விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி விளையாடுவதை பார்க்கலாம், விராட் கோலியை நேரில் பார்க்கலாம் என அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் இந்திய அணி நிர்வாகம் பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது. இதை அடுத்து இந்திய அணி ஆடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில்தான் கராச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி முடிவில் ரசிகர்கள் இந்த கோஷத்தை எழுப்பி உள்ளனர். அந்த போட்டி முடிந்த பின் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் "சாம்பியன்ஸ் டிராபியில் எந்த அணி விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பிய போது, அங்கிருந்த ரசிகர்கள் பலரும், "விராட் கோலி, விராட் கோலி" என கோஷம் எழுப்பினர்.
மற்றொரு நாட்டின் ரசிகர்கள், அதிலும் இந்திய அணியின் எதிரி அணியாக பாவிக்கப்படும் ஒரு அணியின் ரசிகர்கள் இந்திய வீரரான விராட் கோலிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 அன்று நடக்க உள்ளது.