மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியின் கை ஓங்கி இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் கூறி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி சரிவை சந்தித்து வந்தது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் பல முக்கிய டெஸ்ட் தொடர்கள் என வரிசையாக அந்த அணி தோல்விகளை சந்தித்து வந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன்களும், பயிற்சியாளர்களும் பலமுறை மாற்றப்பட்டனர்.

இதன் இடையே கடந்த மூன்று மாதங்களாக பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. குறைந்த ஓவர் போட்டிகளுக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி வரிசையாக வெற்றிகளை குவித்து இருக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. அடுத்து தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது. மறுபுறம் இந்திய அணி இந்த மூன்று மாதங்களில் பல மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது.
இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வரிசையாக மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது இந்திய அணி. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 - 3 என தோல்வி அடைந்தது. அதனால், இந்திய அணி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியின் கை ஓங்கி இருப்பதாக கூறி இருக்கிறார் முகமது ஆமிர். இது பற்றி அவர் பேசுகையில், "பாகிஸ்தான் அணி சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியையும், தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்க அணியையும் வீழ்த்தி இருக்கிறது. இது பாகிஸ்தான் அணியின் பலத்தை காட்டுகிறது."
"குறிப்பாக வெளிநாட்டு சூழ்நிலைகளில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது, சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியின் கை ஓங்கி இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால், பெரிய தொடர்களில் இந்தியா எப்போதுமே வெற்றி பெறும் அணியாகவே இருந்துள்ளது."
"ஆனால், இப்போது இந்திய அணி கடும் அழுத்தத்தில் உள்ளது. கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. மேலும், பும்ரா இல்லையென்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் தான் இந்திய அணியின் சிறந்த பவுலர். இந்திய அணியின் பவுலிங்கை அவர்தான் முன்னின்று வழிநடத்த வேண்டும். அவர் இல்லாமல் இந்திய அணியின் பவுலிங் தாக்கம் 40 முதல் 50 சதவீதம் வரை சரிந்து விடும்." என்று கூறி இருக்கிறார் முகமது ஆமிர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது சந்தேகம் தான் என்பதால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து இருக்கிறது. அதே சமயம், நீண்ட இடைவெளிக்கு பின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்பி இருக்கிறார்.