மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் தொடங்க உள்ளது. எட்டு அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடரை வெல்லப் போகும் அணி எது? என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கணிப்பை கூறி இருக்கிறார்.
இந்திய அணியை புறம் தள்ளி இருக்கும் அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி அந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் தான். எந்த ஒரு அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்."

"இந்தியாவில் நடந்த 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. ஆனால், அதற்கு முன் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருந்தது. தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. எனவே, தற்போது நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கும் இதே போன்ற சாதகமான நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செல்ல போவதில்லை என அறிவித்து இருக்கிறது. இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
இந்திய அணி இந்த தொடரில் மூன்று குரூப் சுற்று போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த மூன்று போட்டிகளும் துபாய் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. ஒருவேளை இந்திய அணி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினாலும் அப்போதும் இந்தியா ஆடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் தான் நடைபெறும்.
அந்த வகையில் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண் என்ற சாதகம் இருப்பது போல, இந்தியாவுக்கு ஒரே மைதானத்தில் ஆடும் சாதகம் உள்ளது. அப்படி இருக்கும் போதும் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் தான் சாம்பியன்ஸ் டிராபி வெல்லும் வாய்ப்பு உள்ள அணி எனக் கூறி இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. அதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் இடம் பெற்றுள்ளன.