கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இமாம் உல் ஹக் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் பஞ்சு மெத்தையில் ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. கராச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பாகிஸ்தான் வீரர்கள் இவ்வகையிலான பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் குறித்து உலகமே அறியும். கைகளில் கொடுக்கப்படும் கேட்ச்களை கூட தவறவிடக் கூடிய அணி என்றால் அது பாகிஸ்தான் மட்டும் தான். பேட்டிங், பவுலிங்கில் என்னதான் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் மட்டும் எப்போதும் மாறியதில்லை. டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது.

அமெரிக்கா அணியுடன் அடைந்த தோல்விக்கு கூட பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இன்னும் 6 மாதங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியில் மாற்றத்தை கொண்டு வர அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி முதலில் கிரிக்கெட் வீரர்களின் ஃபிட்னஸை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கராச்சியில் உள்ள ராணுவ முகாமில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஃபீல்டிங் பயிற்சியாளர் மஸ்ரூர், வீரர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சி அளித்துள்ளார்.
அதில் ஸ்லிப் ஃபீல்டிங்கிற்காக கொடுக்கப்பட்ட பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் பஞ்சு மெத்தையை பயன்படுத்தியுள்ளனர். தரையில் கீழே விழுந்தால் உடலில் காயம் ஏற்படும் என்பதால், பஞ்சு மெத்தையில் தாவி விழுந்து ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சிறு வயதில் குழந்தைகள் தரையில் விழுவதற்கு பயந்து, மெத்தையும் குதித்து விளையாடுவார்கள்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு புற்கள் நிறைந்த தரையில் கீழே விழுந்து பயிற்சி செய்ய கூட அச்சப்படுகின்றனர். இதனால் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர். பஞ்சு மெத்தை மட்டுமல்லாமல் தலையணையும் சேர்த்து வைத்து கொண்டு பயிற்சி செய்யுங்கள் என்று திட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்களின் பயிற்சி வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.