லாகூர்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், "பாகிஸ்தான் அணி பரம எதிரியான இந்தியாவை வீழ்த்த வேண்டும்" என பேசி இருக்கிறார். இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இது தேவையற்ற சர்ச்சையாக மாறி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் எனவும், இந்திய அணி பரம எதிரி எனவும் அவர் பேசி இருக்கிறார்.

மேலும் சாம்பியன்ஸ் டிராபி வெல்வது மட்டுமல்ல இந்தியாவை வீழ்த்துவதும் முக்கியம் என அவர் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் இலக்கு சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டுமல்ல, இந்தியாவை வீழ்த்துவதும் தான் என கூறி இருக்கிறார்.
"எங்களிடம் ஒரு சிறந்த அணி (பாகிஸ்தான் அணி) உள்ளது, அவர்கள் சமீபத்திய காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால் உண்மையான பணி இப்போது சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டுமல்ல, துபாயில் நடக்க இருக்கும் போட்டியில் நமது பரம எதிரியான இந்தியாவையும் தோற்கடிப்பதுதான். நமது தேசம் முழுவதும் நமது அணிக்கு பின்னால் நிற்கிறது," என்று ஷேபாஸ் ஷெரீப் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக புதுப்பிக்கப்பட்ட கடாஃபி மைதானத்தின் திறப்பு விழாவில் தான் ஷேபாஸ் ஷெரீப் இவ்வாறு பேசினார். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி தொடரை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஷேபாஸ் ஷெரீப் கூறினார்.
இந்தத் தொடர் முழுமையாக பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததால், இது ஒரு ஹைபிரிட் தொடராக மாற்றப்பட்டு, இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.