மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஃபக்கர் சமான் தெரிவித்துள்ளார். பல இழுத்தடிப்புக்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து மார்ச் 9ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் ஆசிய கண்டத்தில் இந்தத் தொடர் நடைபெறுவதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தடுமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபக்கர் சமான், பாகிஸ்தானில் இந்தத் தொடர் நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்ளும் அணியும் சுழற் பந்து வீச்சு பலமாக இருக்கும் அணியும் மட்டும்தான் வெற்றி பெற முடியும் அந்த வகையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற அணிகள் இந்த தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறிவிடும்.
என்னை கேட்டால் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தான் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் என்று ஃபக்கர் சமான் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பதிலாக வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகிறது.
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் ஃபக்கர் சமான் விளக்கம் அளித்துள்ளார். பாபர் அஸாம் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதை விமர்சித்து ஃபக்கர் சமான் டிவிட் போட்டிந்தார். இதனால் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருந்தார். இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஃபக்கர் சமான் , நான் அப்படி ஒரு ட்விட் போட்டிருக்கக் கூடாது.
நான் போட்ட டிவிட்டை பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்ததாக அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் அசாமை நீக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தி வந்தார்கள். அதை விமர்சித்து தான் நான் அவ்வாறு பதிவிட்டு இருந்தேன். பாபர் அணிக்காக பல நன்மைகளை செய்திருக்கிறார். இப்படி இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்று பேசுகிறார்களே என்று தான் நான் பதிவிட்டேன் என்று ஃபக்கர் சமான் கூறியுள்ளார்.