லாகூர்: உலகின் 8 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப மறுத்து உள்ளது பிசிசிஐ. அதனால் அந்த தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், அதைவிட பெரிய அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டு இருப்பதாவும், அதனாலேயே சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வேறு நாட்டுக்கு சென்று விடும் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி எச்சரித்து இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தான் சென்ற போது அந்த அணியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அனைவரும் உயிர் தப்பிய போதும் பாகிஸ்தானுக்கு மற்ற அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்தின. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒவ்வொரு அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கின.

எனினும், இடையே சில அணிகள் சுற்றுப்பயணத்திற்கு ஒப்புக்கொண்டு கடைசி நேரத்தில் பாதுகாப்பு குறைபாடுகளால் விலகிய சம்பவங்களும் நடந்தேறின. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு முன்பே அது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாசித் அலி கூறி இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தானில் ஆங்காங்கே ராணுவத்துடன் கலவரக்காரர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ராணுவத்தினர் மற்றும் கலவரக்காரர்கள் 28 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தான் பாசித் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை எச்சரித்து இருக்கிறார்.
அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. அந்த அணிகளுக்கு ஏதேனும் ஒரு சிறிய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடும் என பாசித் அலி கூறி இருக்கிறார்.
இது குறித்து பாசித் அலி பேசுகையில், "இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்னதாக நடக்கும் இந்த தொடர்களில் ஏதேனும் தவறு நடந்தால் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடக்காது. பாலோசிஸ்தான் மற்றும் பெஷாவரில் நமது வீரர்கள் மடிந்துள்ளனர். அதற்கு என்ன காரணம் என்பதை அரசு மட்டுமே அறியும். அடுத்து வரும் தொடர்களில் ஒரு சிறிய பாதுகாப்பு குறைபாடு கூட ஏற்பட்டு விடக்கூடாது. பாகிஸ்தான் வரும் அணிகளுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு அளிக்கும் உச்சபட்ச பாதுகாப்பை அளிக்க வேண்டும். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி அறிவார் என நான் நம்புகிறேன்" என கூறி இருக்கிறார்.