கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 முதல் தொடங்க உள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும், எந்த ஸ்ட்ரீமிங் செயலி மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம் என இங்கே காணலாம்.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும். கராச்சி தேசிய மைதானத்தில் இந்த போட்டியில் நடைபெறும். இந்தத் தொடரை மொபைலில் அல்லது இணையதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணலாம். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 என இரண்டு ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி குழும சேனல்களிலும் இந்த போட்டியை காணலாம்.
இந்த முறை சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் களம் இறங்க உள்ளது. நியூசிலாந்து அணியில் சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். லாக்கி பெர்குசன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இதே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது. எனவே, இந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா? அல்லது சொந்த மண்ணில் பல் பிடுங்கிய பெட்டிப் பாம்பாக அடங்குமா? என பார்க்கலாம்.