கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே கராச்சியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான பிட்ச் அறிக்கை மற்றும் வானிலை அறிக்கை பின்வருமாறு:
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள கராச்சி மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக, தட்டையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் ஓவரிலிருந்தே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்கலாம். 300 ரன்கள் என்பது எளிதாக எட்டக்கூடிய ஸ்கோராகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக பந்து வீசும் அணி சில சமயம் பனிப்பொழிவின் தாக்கத்தால் சிக்கலில் கூடும். அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம். இந்த மைதானத்தில் இதுவரை நடந்த 78 போட்டிகளில் 39 முறை இரண்டாவதாக பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 36 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இந்த முதல் போட்டிக்கான வானிலை அறிக்கை சாதகமாக கூறப்பட்டிருக்கிறது. போட்டி நடக்கும் நேரத்தில் ஒரு சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது என்பதோடு 29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது என்ற முக்கியத்துவமும் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை அதிகரித்து உள்ளது. மேலும், சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.
எனவே, பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தங்கள் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாகிஸ்தான் அணி அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று இந்திய அணியை சந்திக்க உள்ளது. அதுவும் அந்த அணிக்கு இப்போதே அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது.