கராச்சி: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனும் போட்டியை நடத்தும் பாகிஸ்தானும் முத்தரப்பு கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகின்றது. இந்த இரு அணிகளும் அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு இறுதி போட்டியில் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 242 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 28 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ஒ ரூரிக்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாட்னர் 10 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை அவர்களது சொந்த மண்ணுக்கு சென்று வென்றது. ஆனால் அந்த அணியில் சையும் அயூப் மிகவும் முக்கியம் வாய்ந்த வீரராக இருந்தார். ஆனால் தற்போது அவர் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
பாபர் அசாம் கடைசியாக சதம் விளாசியது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான். அதன் பிறகு 21 இன்னிங்ஸ்களாக பாபர் அசாம் சதம் இல்லாமல் விளையாடி வருகிறார். இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடரில் பாபர் அசாம், தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும்.
இதேபோன்று முஹம்மது ரிஸ்வான் சவுத் ஷகில், சல்மான் அகா போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது பாகிஸ்தான் அணிக்கு பிளஸ் பாயிண்ட் ஆகும். முத்தரப்பு தொடரில் காயம் காரணமாக விலகிய ஹரிஷ் ரவுப் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திரும்பி இருக்கிறார். இதுவும் பாகிஸ்தான் அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் அனுபவ வீரரான பக்கர் சமான் இந்த தொடரில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய பொறுப்பில் இருக்கின்றார்.
எனினும் பாகிஸ்தான் வீரர்கள் சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறினார்கள். இது அவர்களுக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முத்தரப்பு தொடரில் அபார வெற்றியை பெற்றிருந்தாலும், தற்போது லோகி பெகுர்சன், பென் சியர்ஸ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் நியூசிலாந்து அணியில் இந்தியாவைப் போல் இரண்டு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியில் நடுவரிசை வீரர்களும் அதிரடியாக விளையாடுகிறார்கள். இதனால் இந்த தொடரில் இந்தியாவுக்கு அடுத்து நியூசிலாந்து தான் பலமான அணியாக விளங்குகிறது.
2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நியூசிலாந்தும், பாகிஸ்தானும் 11 முறை மோதி இருக்கிறார்கள். இதில் நியூசிலாந்து அணி ஐந்து முறையும், பாகிஸ்தான் அணி ஆறு முறையும் வென்றிருக்கிறது. கடைசியாக நான்கு முறை நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் மூன்று போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது.