மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் பாகிஸ்தானுக்கு வந்து தாங்கள் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணி அறிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்த பிசிசிஐ வலியுறுத்தி இருந்தது.
எனினும் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் ஹைபிரிட் முறையில் போட்டியில் நடத்தினால் தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் தற்போது இறங்கி வந்திருந்தாலும் இனி தாங்களும் இந்தியா வந்து எந்தவித ஐசிசி போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று கூறி இருக்கிறது.

ஒருவேளை பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தொடரை விட்டு வெளியேறுவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இல்லை என்ற செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானே நினைத்தாலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை விட்டு வெளியேற முடியாது என ஐசிசி நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ஒவ்வொரு தொடரிலும் பங்கேற்க போகும் அணிகள் ஐசிசி இடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். அந்த ஒப்பந்தத்தில் ஐசிசி சொல்லும் விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று பதிவிடப்பட்டிருக்கும். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே ஐசிசி தொடர்களிலிருந்து வரும் வருமானத்தை பெற முடியும்.
இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டு விட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் அணி தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விளக்குகிறோம் என்று கூறினால் அவர்கள் மீது ஐசிசி சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகை இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பெரிய தொகையை இழப்பீடாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க நேரிடும்.
மேலும் ஐசிசியிடமிருந்து வரும் நிதி பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் போய்விடும். இப்படி பல பிரச்சனைகள் இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலக முடியாது என்று அந்த நிர்வாகி கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெறுவதற்கு முன்பே இந்தியா, தங்கள் நாட்டில் விளையாடுமா என ஐசிசி இடம் பாகிஸ்தான் கேட்டதாகவும், அதற்கு போதிய பதில் ஐசிசி இடம் இருந்து அப்போதே தரப்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு இருக்கிறார்.