துபாய் : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் மறு பிரிவிலும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 50 உலகக் கோப்பை போன்ற தொடரை வென்ற நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைக்கும் உத்வேகத்தில் இருக்கிறது.

ஆனால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த அணியில் முக்கிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்டிரு மெக்டோனால்ட் கம்மின்ஸ் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால் அவருக்கு பதில் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் நிலைமை உண்டாகலாம் என்று கூறியிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய பிறகு கம்மின்ஸ் வேறு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கின்றார்.
அது தவிர பயிற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கின்ற காரணமாக ஸ்மித் அல்லது ஹெட் ஆகிய இருவரில் ஏதேனும் ஒருவர் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கம்மின்ஸ் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ள பயிற்சியாளர், ஹெசல்வுட் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்திருக்கிறார்.