துபாய்: 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் முடிவை ஏற்க மறுத்த பாகிஸ்தான், வெறுப்பேற்றும் முடிவை எடுத்து உள்ளது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இது வரை ஒப்புக்கொள்ளவில்லை. இது பற்றி விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறது.

நேற்று இரண்டாவது நாளாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மொஹ்சின் நக்வி. "பாகிஸ்தானின் பெருமை தான் எங்களுக்கு முக்கியம். அதை காப்பாற்றும் வகையில் முடிவு எட்டப்படும்." என்றார்.
பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு இதுதான் - ஹைபிரிட் (Hybrid) முறையில் அதாவது இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும். ஆனால், இனி எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது. அப்போது பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் தான் அந்த தொடர்களில் பங்கேற்கும்.
அதாவது, இந்தியாவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டால் அந்த தொடரில் பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த பிசிசிஐ ஒப்புக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது சிக்கலான கோரிக்கை என்பதால் இந்த விவகாரம் மேலும் இடியாப்ப சிக்கலாக மாறி உள்ளது.
இது பற்றி மொஹ்சின் நக்வி பேசுகையில், "நான் சாம்பியன்ஸ் ட்ராப விவகாரத்தை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அது பல விஷயங்களை பாழாக்கி விடும். நாங்கள் எங்களுடைய முடிவு என்ன என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து இருக்கிறோம். இந்தியர்களும் அவர்கள் முடிவை தெரிவித்து இருக்கிறார்கள். அனைவரும் வெற்றி பெறக் கூடிய ஒரு முடிவை எட்டுவது தான் எங்கள் நோக்கம்." என்றார்.
மேலும், "கிரிக்கெட் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். நாங்கள் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ, அதை செய்யப் போகிறோம். எந்த முடிவை எடுத்தாலும் அது சம அளவிலான முடிவாக இருக்க வேண்டும். பாகிஸ்தானின் பெருமை எங்களுக்கு மிகவும் முக்கியம். கிரிக்கெட் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் அதே நேரம், பாகிஸ்தானின் பெருமை குலையாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்." என்றார்.
"இங்கு ஒரு பக்கத்துக்கு சாதகமான சூழ்நிலை இருக்கக் கூடாது என்பதை நான் உறுதி செய்ய முயற்சி செய்கிறேன். நாங்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வோம்; ஆனால், அவர்கள் எங்கள் நாட்டிற்கு பயணம் செய்ய மாட்டார்கள் என்று இருக்கக் கூடாது. இதை முதலும், முடிவுமாக, நிரந்தர முடிவாக எட்ட வேண்டும் என்பதே எனது யோசனை." என்றார்.