துபாய்: 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை "ஹைபிரிட்" மாடலாக நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், இது பற்றிய பேச்சு வார்த்தை கடந்த சில நாட்களாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே டிசம்பர் 1 முதல் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.
இந்த நிலையில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் வேண்டுகோளுக்கு ஒப்புக்கொள்ள மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வர வேண்டாம், அதே போல பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லாது என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டு இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மூன்று சர்வதேச தொடர்கள் நடைபெற உள்ளன. மகளிர் உலகக் கோப்பை மற்றும் ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆகியவை அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ளன. அந்த தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது.
அதற்கு பதிலாக பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். இதை பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இதற்கு ஒப்புக்கொண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனால், பிசிசிஐ-க்கு அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.
இதனிடையே ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் அவர் இந்த ஒப்பந்தத்தை வேண்டாம் என மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு மீண்டும் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது நிலைமை இழுபறியாக மாறி உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்காக மட்டும் "ஹைபிரிட் மாடலை" பாகிஸ்தான் ஏற்காது. அதே போல, பிசிசிஐ இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடர்களின் போது பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக் கொள்ளாது என்பதால் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.