இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு அனுமதிக்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்து இருக்கிறது. இதை அடுத்து அந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.
மேலும், இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாடுகளில் நடத்த ஆலோசிக்குமாறு அறிவுறுத்தியும் இருக்கிறது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மேலும் விளக்கம் வேண்டும் என கடிதம் அனுப்பி இருக்கிறது.

மறுபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐக்கு எதிராக "போர்" தொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது இந்தியாவுக்கு அடுத்து வலுவான கிரிக்கெட் கட்டமைப்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை கொண்ட கிரிக்கெட் அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளின் கிரிக்கெட் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகினாலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இந்த தொடரில் பாகிஸ்தானிலேயே பங்கேற்க ஒப்புக்கொள்ள வேண்டும் என பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மேலும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பிற கிரிக்கெட் அமைப்புகளுடனும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பிசிசிஐ-க்கு எதிராக மற்ற கிரிக்கெட் அமைப்புகளை ஒன்று திரட்ட முயன்று வருகிறது. இந்திய அணி இல்லாமல் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த முடிவு செய்து இவ்வாறு செய்து வருகிறது. ஆனால், இந்த முயற்சியில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்தியா பங்கேற்கவில்லை என்றால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு மிகப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், ஒளிபரப்பு உரிமையை பெற்ற நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் முக்கிய அணிகள் ஆட வேண்டும் என குறிப்பிட்டே ஒப்பந்தத் தொகையை அளித்து இருப்பார்கள். எனவே, அந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள் என்பதால் இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்துவது எளிதாக இருக்காது.
எப்படியும் பிற அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதியை மீறி இந்த தொடரில் இருந்து விலகும் முடிவை எடுக்க மாட்டார்கள். அதே சமயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும், பிசிசிஐக்கு எதிராகவும் எந்த ஒரு கிரிக்கெட் அமைப்பும் வெளிப்படையாக எந்த கருத்தையும் கூறாது.
ஏனெனில், ஒவ்வொரு கிரிக்கெட் அமைப்பும் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்களின் மூலம் மட்டுமே மிகப்பெரும் வருவாயை ஈட்டி வருகின்றன. அவர்களது வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி பங்கு இந்தியாவுடனான இருதரப்பு தொடர்களின் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. எனவே, எந்த அணியும் பிசிசிஐக்கு எதிராக பேசாது என்பதே தற்போது உள்ள சூழ்நிலை. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதை மாற்ற முயன்று வருகிறது.