மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணியின் தோல்விகள் மற்றும் அவர்களின் அணுகுமுறை குறித்து விமர்சித்துள்ளார். இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் படுதோல்வி அடைந்தது.
இருப்பினும், இங்கிலாந்து வீரர்கள் இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை. தோல்விகளுக்கு தொடர்ந்து சப்பைக்கட்டு காரணங்களை கூறி வருகின்றனர்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், "இங்கிலாந்து அணி திறமையான அணியாக இருந்தாலும், தொடர்ந்து தோல்வி அடைந்துவிட்டு அதற்கு சப்பைக்கட்டு காரணங்களை கூறி வருவது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது."

"அவர்களுக்கு திறமை இல்லாமல் இல்லை. இது நிச்சயமாக தலைசிறந்த இங்கிலாந்து அணி தான். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பென் டக்கெட் என்ன சொன்னார் என்பது முக்கியமில்லை. ஆனால் இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது."
"டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட பென் ஸ்டோக்ஸ் இதே போல தான் ஒரு விஷயத்தை கூறினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளி பட்டியலை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். இது நகைச்சுவை அல்ல. ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வி அடைந்து விட்டு இது போன்ற சப்பை கட்டு காரணங்களை கூறுகிறார்கள்."
"2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையில் இங்கிலாந்து படுமோசமாக செயல்பட்டது. சிறந்த வீரர்கள் அடங்கிய அணியாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஆட்டத்திற்கு நியாயம் செய்ய முடியாமல் உள்ளனர்" என்று கூறினார்.
அஸ்வின் மேலும் கூறுகையில், "இங்கிலாந்து அணி தோல்விகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சப்பைக்கட்டு காரணங்களை கூறி தப்பிக்க பார்க்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது. அவர்கள் தோல்விகளை ஆராய்ந்து, தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யாமல், தோல்விகளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள். இது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.