மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வு இன்று நடைபெற உள்ளது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு இடம் அளிக்கப்படாது என கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் மீது பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சில அதிருப்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேர்வுக் குழு நீண்ட காலமாகவே தேடி வந்தது. சமீபத்தில் சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு அதிரடி சதங்களை அடித்து இருந்தார்.

எனவே, அவரை ஒரு நாள் அணியில் தேர்வு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே, ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆதரவு இருந்தால் மட்டுமே ரிஷப் பண்ட்டால் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால், ரோஹித் சர்மாவின் நிலையும் கவலைக்குரியதாக இருப்பதால் அவரின் பேச்சு தேர்வுக் குழு கூட்டத்தில் எடுபடாமல் போகக் கூடும். இந்த நிலையில், சஞ்சு சாம்சன் இந்திய ஒரு நாள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ரிஷப் பண்ட் ஒரு நாள் போட்டிகளில் 27 இன்னிங்ஸ்களில் 871 ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 33.5 என்பதாகவே உள்ளது. பண்ட் டி20 போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் 1209 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதில் அவரது சராசரி 23.25 என்பதாக உள்ளது.
மறுபுறம் சஞ்சு சாம்சன் ஒரு நாள் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 510 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது ஒரு நாள் போட்டி பேட்டிங் சராசரி 56.66 என்பதாக உள்ளது. டி20 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் 810 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் அவரது சராசரி 27.93 என்பதாக உள்ளது. இந்த ஒப்பீடுகளால் சஞ்சு சாம்சனுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.