கொழும்பு: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை அணி கிரிக்கெட் உலகில் மிக மோசமான சரிவை சந்தித்து வந்தது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இலங்கை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து தலைகுனிவை சந்தித்தது. அந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் பெரிய விவாதமாக வெடித்தது.
இந்த நிலையில் தான் அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டனர். தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் இலங்கை அணி கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார். இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் ஜெயசூர்யா இடம் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவராக பார்க்கப்படும் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து தனது அணியை தொடர்ந்து வெற்றி பெற வைத்து வருகிறார். இந்த வெற்றிக்கான முதல் தொடக்கமாக அமைந்தது இந்திய அணி தான். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட அதே சமயத்தில் தான் ஜெயசூர்யா இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது இந்தியா மற்றும் இலங்கை மோதிய ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை 2 - 0 என வெற்றி பெற வைத்தார் சனத் ஜெயசூர்யா. அதன் பின் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களை இலங்கை அணி வென்றது. தற்போது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி வென்று இருக்கிறது. 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படும் நிலையில் அந்தத் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வென்று இருக்கிறது.
இதை அடுத்து சனத் ஜெயசூர்யாவையும், கௌதம் கம்பீரையும் ஒப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள். கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்திய அணி சில வெற்றிகளை பெற்றிருந்தாலும் பல மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது என பலவற்றையும் சுட்டிக்காட்டி ஒப்பிட்டு வருகின்றனர். ஒரு பயிற்சியாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பலரும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவை பாராட்டி வருகின்றனர்.