கராச்சி: 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்குக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சர்பராஸ் அகமது, அந்தத் தொடரின் ஆரம்பகட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது பற்றியும், பின்னர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக அணி வீரர்களுக்கு அவர் அளித்த ஊக்கத்தால் கிடைத்த வெற்றி பற்றியும் பேசி இருக்கிறார்.
2017ல் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, 339 ரன்கள் எடுத்து இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இது பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் வெற்றியாக அமைந்தது. அதற்கு முன் பாகிஸ்தான் அணி 1992ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2009ல் டி20 உலகக் கோப்பையையும் வென்று இருந்தனர்.

உலகக் கோப்பை அல்லது டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை விட வலுவான அணியாகக் கருதப்பட்டாலும், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் வெற்றிகளை பெற்று உள்ளது.
2017 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானுக்கு ஒரு மோசமான தொடக்கமாக அமைந்தது. அப்போது குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோஹித் சர்மா (91), ஷிகர் தவான் (68) மற்றும் விராட் கோலி (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா குரூப் போட்டியில் வெற்றி பெற்றது.
பின்னர், ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் போன்ற மூத்த வீரர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணி எப்படி அந்த தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்தது என்பதை நினைவு கூர்ந்தார் சர்பராஸ் அஹமது. "இந்தியாவிடம் தோற்ற பிறகு, நாங்கள் ஒரு முக்கியமான அணி சந்திப்பை நடத்தினோம். ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் போன்ற மூத்த வீரர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்படிப்பட்ட வீரர்கள் அணியில் இருப்பது அவசியம். அந்த நாள் முதல் நாங்கள் எங்கள் மனநிலையை மாற்றினோம். அந்த தோல்வி எங்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. நாங்கள் அணியில் சில மாற்றங்களைச் செய்தோம். அது எங்கள் நம்பிக்கையை அதிகரித்தது," என்று சர்பராஸ் கூறினார்.
இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஃபகார் ஜமான் அணியின் தொடக்கத்திற்கு ஒரு புதிய பலம் சேர்த்தார். ஜுனைத் கான் மற்றும் ரயீஸ் ஆகியோர் புதிய பந்தில் பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தனர்.
"அரையிறுதியில் நாங்கள் இங்கிலாந்தை எதிர்கொண்டோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். பின்னர், இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்தித்தோம். நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன் சிறந்த அணிகளை வீழ்த்தி இருந்தோம் என்பதால், இந்தியாவை எதிர்கொள்வது ஒன்றும் புதிதல்ல என்று நான் நம்பினேன். இறுதிப் போட்டிக்கு முன்பு நான் வீரர்களிடம் இலகுவாக விளையாடுங்கள், போட்டி முடிவைப் பற்றி கவலைப்படாமல் உங்களின் 100 சதவீதத்தை கொடுங்கள் என்று சொன்னேன்."
"அதன் பிறகு நடந்தது வரலாறு. கடைசி விக்கெட் விழுந்து நாங்கள் வெற்றி பெற்றபோது, அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் கடைசி கேட்சைப் பிடித்தபோது கல்லியில் இருந்தேன். நான் ஓடினேன். ஷோயப் மாலிக்கைப் பார்த்து ஓடி குதித்து கட்டிப்பிடித்தேன். ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து கொண்டாடியது. அது விவரிக்க முடியாத தருணம்," என்று சர்பராஸ் கூறினார்.