லாகூர் : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் முதல் அரை இறுதி ஆட்டம் மற்றும் இந்தியா தகுதி பெற்றால் இறுதிப் போட்டி அனைத்தும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரு பிரிவுகளாக எட்டு அணிகள் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை கராச்சியில் எதிர்கொள்கிறது.
பிப்ரவரி 20ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை துபாயில் எதிர்கொள்கிறது. 21ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் கராச்சியில் பல பரிட்சை நடத்துகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துடன் லாகூரில் மோதுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி வங்கதேசமும் நியூசிலாந்தும் ராவல்பிண்டியில் விளையாடும். பிப்ரவரி 25ஆம் தேதி ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணி ராவல்பிண்டியில் மோதுகிறது.
பிப்ரவரி 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்து லாகூரில் மோதுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தானும் வங்கதேசமும் ராவல்பிண்டியில் மோதுகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கானிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் லாகூரில் மோதுகிறது. மார்ச் ஒன்றாம் தேதி தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் கராச்சியில் விளையாடுகிறது.
மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவும் நியூசிலாந்தும் துபாயில் விளையாடுகிறது. மார்ச் 4ஆம் தேதி முதல் அரை இறுதி ஆட்டம் துபாயிலும், மார்ச் 5ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி ஆட்டம் லாகூரிலும் நடைபெறும். மார்ச் ஒன்பதாம் தேதி இறுதிப்போட்டி லாகூரில் நடைபெறும். ஒருவேளை இந்தியா இந்த போட்டிக்கு தகுதி பெற்றால் இறுதிப் போட்டி துபாயில் நடத்தப்படும். ஒரு வேலை ஒன்பதாம் தேதி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவாக பத்தாம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.