கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால், அவர்களின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் இடம் பிடித்துள்ளன. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை அடுத்து குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளை சந்திக்கவுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக நெட் ரன் ரேட் பெற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஒருவேளை அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று குறைவான நெட் ரன் ரேட் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருந்தால் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் சமநிலையில் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில்தான் அரையிறுதிக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும்.
எனவே, பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு போட்டிகளையும் நிச்சயம் வெல்ல வேண்டும். அதில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும். அதன் பின் ஏதேனும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் சாதகமாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.
தற்போது பாகிஸ்தான் பிப்ரவரி 23 அன்று இந்தியாவுடன் விளையாட உள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெறுவது பாகிஸ்தான் அணிக்கு மிக கடினமான ஒரு விஷயமாக இருக்கும். எனவே அந்த போட்டிதான் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக அமைய உள்ளது.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை ஒரு வெற்றி பெற்றுவிட்டது. இனி அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் அதிக நெட் ரன் ரேட்டை வைத்துக் கொண்டாலே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறலாம். சுருக்கமாக, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.