துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், இந்திய அணி ஆடவுள்ள அரையிறுதி போட்டியும் துபாயில் தான் நடைபெறும். அந்த வகையில், இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் விளையாடினால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி பார்க்கும் முன், அந்த இரண்டு அணிகளும் துபாய் மைதானத்தில் மோதினால் என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். அது தான் திருப்பத்தை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது.
பொதுவாக துபாய் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். இந்திய அணி துபாய் மைதானத்தில் தான் அனைத்து போட்டிகளிலும் விளையாடப் போகிறது என்பதை முன்பே அறிந்ததால், ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை உத்தேச அணியில் தேர்வு செய்துள்ளது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள மற்ற ஏழு அணிகளில், சுழற்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்படும் அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் தான்.
அந்த அணியில் முகமது நபி, ரஷித் கான் என சில திறமையான, அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும், அவர்கள் துபாய் மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே, ஆப்கானிஸ்தான் - இந்தியா அரையிறுதியில் மோதினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அடுத்து ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ன நடந்தால் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும்? என்பது பற்றி பார்க்கலாம்.
தற்போது குரூப் பி பிரிவில் இருக்கும் நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் உள்ளன.
இதில் தென்னாப்பிரிக்கா அணி அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதால், அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றால், ஐந்து புள்ளிகள் மற்றும் அதிக நெட் ரன் ரேட்டுடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பெற்று விடும்.
அப்போது அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி வென்றால், அரையிறுதிக்கு முன்னேறும். அப்போது ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும். அதன் மூலம், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தான் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்குமா? அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்குமா? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக இருக்கும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வென்றால், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். அந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தால், இந்திய அணிக்கு எதிராக அரையிறுதியில் மோத வாய்ப்புள்ளது.