துபாய்: இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக, தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடி 5 விக்கெட்களை வீழ்த்திய அவரை நீக்க முடியுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது. இந்திய அணியில் ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இது மிகவும் முக்கியமான போட்டி என்பதால், அணித் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. துபாயில் உள்ள பிட்ச் மந்தமாகவே இருக்கிறது.

எனினும், இதுவரை இந்திய அணி ஆடிய 3 போட்டிகளுக்கும் மூன்று வெவ்வேறு பிட்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரையிறுதிக்கு அந்த மூன்றில் ஏதோ ஒரு பிட்ச் தான் பயன்படுத்தப்பட உள்ளது. இது ஒரு புறம் இருக்க, ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை சமாளிக்க அனைத்து வகையிலும் தயாராகவே இருக்கும்.
இந்திய அணி அதிக சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் என்பதை ஆஸ்திரேலியா அணியினர் ஊகித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து இருப்பார்கள். பவர்பிளே, மிடில் ஓவர்கள், கடைசி 10 ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவர்கள் தயாராகி இருப்பார்கள். எனவே இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதா அல்லது இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம் இருக்க வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி முகமது ஷமி மற்றும் ஹர்ஷித் ராணா என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களையும், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் அணியில் தேர்வு செய்திருந்தது. ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்துவீச்சாளராக செயல்பட்டார்.
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது குரூப் சுற்றுப் போட்டியில் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நான்காவது சுழற் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். அவர் அந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.
ஆனால் தற்போது ஹர்ஷித் ராணா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முழுவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா அணி சுழற் பந்துவீச்சாளர்களை சமாளித்து ஆட சரியான திட்டத்தை வகுத்திருந்தால், இந்திய அணி 40 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து வீசும்போது மிகப்பெரிய பின்னடைவாக மாறும்.
குறிப்பாக பவர் பிளே ஓவர்களிலும், கடைசி 10 ஓவர்களிலும் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது ஆபத்தானதாக மாறலாம். இதையெல்லாம் யோசித்து இந்திய அணி இரண்டு முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ஒரு சுழற்பந்துவீச்சாளரை நீக்க வேண்டி இருக்கும்.
அது குல்தீப் யாதவாகவோ அல்லது வருண் சக்கரவர்த்தியாகவோ இருக்கும். அக்சர் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் அவர்களை நீக்க வாய்ப்பு இல்லை. குல்தீப் யாதவ் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் என்ற வகையில் அவரை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வருண் சக்கரவர்த்தியை நீக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது சிக்கலான முடிவாகவே இருக்கும். இந்திய அணி பிட்ச் சூழ்நிலையை வைத்து கடைசி நிமிடம் வரை அணித் தேர்வுகளில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், அது குல்தீப் யாதவா அல்லது வருண் சக்கரவர்த்தியா யாரை நீக்க போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.