ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு தற்போது ஷாஹித் அப்ரிடி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய பிரச்சனையின் ஆணிவேரை வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி. பாகிஸ்தான் அணி சமீபகாலமாக மோசமாக விளையாடி வருகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பைகளை தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அந்த அணி முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளது.

இதை அடுத்து வாசிம் அக்ரம் கோபமாக பேசியிருந்தார். பாகிஸ்தான் அணியில் ஆறு அல்லது ஏழு வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் மூலம் 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படும் என கூறியிருந்தார்.
அதற்கு தற்போது பதில் அளித்துள்ள ஷாஹித் அப்ரிடி, "வாசிம் அக்ரம் அன்று பேசியதை நான் கேட்டேன். அன்று நாம் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தோம். இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்ததால் அனைவரும் கடுமையாக விமர்சித்தோம். ஆனால், வாசிம் அக்ரம் ஆறு அல்லது ஏழு வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றார். நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்."
"அந்த ஆறு, ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அதே போல விளையாடக்கூடிய ஆறு, ஏழு வீரர்கள் உங்களிடம் இருக்கிறார்களா? நமது உள்ளூர் கிரிக்கெட்டில் அதுபோன்ற வீரர்கள் இருக்கிறார்களா? நாம் அது போன்ற வீரர்களை பயிற்சி மையங்களில் உருவாக்கி இருக்கிறோமா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.
இதன் மூலம் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு அடிப்படையிலேயே சரிவை சந்தித்து இருப்பதை ஷாஹித் அப்ரிடி வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதன் கிரிக்கெட் அணியை பற்றி கவலைப்படுவதை விட பள்ளி, கல்லூரி அளவிலும் மாவட்ட அளவிலும் கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றுவது குறித்துதான் சிந்திக்க வேண்டும். அதைத்தான் ஷாஹித் அப்ரிடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.