மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சிவம் துபே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் அவர் இடம் பெறாத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த ஆறு மாதங்களிலேயே இந்திய டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற்றார். அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஒருநாள் அணியிலும் தேர்வு செய்ய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் டி20 தொடரின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறார். அதன் காரணமாகவே சிவம் துபேவுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சிவம் துபே ஆகிய இருவருமே வேகப்பந்து வீசும் ஆற்றல் உடைய பேட்ஸ்மேன்கள் ஆவர். ஆனால், நிதிஷ் குமாரை விட சிவம் துபே அதிக சர்வதேச போட்டிகள் மற்றும் அதிக உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்.
சிவம் துபே ரிசர்வ் வீரர் எனப்படும் பிரிவில் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எனவே அவர் துபாய்க்கு செல்ல மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை ரிசர்வ் வீரர்களை இந்திய பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கும் இடத்துக்கு அனுப்பவில்லை. இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் ரிசர்வ் வீரர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் மட்டுமே சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்க வழி உள்ளது.