இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு விட்டதாகவும், இந்தியாவை சீண்டும் சில கருத்துகளையும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறி இருக்கிறார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக்கொண்டதில் தவறு ஏதும் இல்லை எனவும், வருமானத்தில் கூடுதல் பங்கு கேட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி அதுவும் நியாயமானது என கூறி இருக்கிறார். மேலும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு போகாமல் இருக்கக்கூடாது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு சென்று இந்தியாவில் வைத்தே அவர்களை வீழ்த்த வேண்டும் எனவும் பேசி இருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டுமே வெளிநாட்டில் நடத்துவது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இதுவரை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறது. மேலும், இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு செல்லாது என கூறி உள்ளது.
இது குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான் சோயப் அக்தர், இந்திய அணி மீதான பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிலைப்பாடு பற்றி சில சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினார்.
"பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு தொடரை நடத்தும் உரிமை மற்றும் வருமானத்தில் பங்கு ஆகியவை அளிக்கப்படுகிறது. எனவே, அவர்கள் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்பு கொண்டதில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தானின் நிலைப்பாடு நியாயமானது. அவர்கள் இதைவிட இன்னும் உறுதியான நிலையில் இருந்து இருக்கலாம்."
"நாம் சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்துகிறோம். ஆனால், இந்தியா இங்கு வர மறுக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் நமக்கு வருமானத்தில் அதிக பங்கை அளிக்க வேண்டும். இது நல்ல விஷயம் தான். மேலும், இந்தியாவுடன் எதிர்காலத்தில் விளையாடுவது பற்றிய விஷயத்தில் நாம் நிச்சயமாக நட்பை கடைபிடிக்க வேண்டும். என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் நாம் இந்தியாவுக்கு சென்று இந்தியாவை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்." என்றார் சோயப் அக்தர்.