மும்பை: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
அதை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த இரண்டு ஒருநாள் தொடர்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால் அவரை பிசிசிஐ ஒதுக்கி வைத்திருந்தது. இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அவர் கோப்பை வென்றதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதன் பின்னர் நடந்த எந்த தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார்.
தேசிய டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபி, தேசிய டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடர், மற்றும் தேசிய ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை என மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் அபாரமாக ரன் குவித்து இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்பட முடிவு செய்திருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் பிசிசிஐ தேர்வு குழு அவருக்கு வாய்ப்பு அளிக்க உள்ளது.