மும்பை: சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருக்கிறது. அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. இந்திய அணியில் கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என மூத்த வீரர்கள் பலரும் இருக்கும் நிலையில் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி கிடைத்து இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் யாரும் எதிர்பாராதவிதமாக சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருந்தது.

இது பிசிசிஐ-யின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வாகவே இது பார்க்கப்படுகிறது. அவர்தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் என கூறப்படும் நிலையில், இந்த முக்கிய தொடரில் அனுபவம் பெற வேண்டி அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்று துவக்க வீரராக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மூன்றாம் வரிசையில் விராட் கோலி களம் இறங்க உள்ளார்.
அவரை தொடர்ந்து கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா. அக்தர் பட்டேல் ஆகியோர் முதல் எழு பேட்ஸ்மேன்கள் வரிசையில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா என மேலும் இரண்டு பேட்டிங் ஆல் ரவுண்டர்களும் இருப்பதால் அவர்களும் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்று உள்ளனர். மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம் பெற்று இருக்கிறார். ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.