கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பி பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருக்கிறது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால் மட்டுமே தொடரை விட்டு வெளியேறும் என்ற நிலை இருந்தது.

இதனால் தென்னாப்பிரிக்க அணி நல்ல உத்வேகத்துடன் தான் இங்கிலாந்தை எதிர்கொண்டார்கள். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 37 ரன்களும், பென் டக்கட் 24 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 21 ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் மார்க்கோ யான்சன் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதனை அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டேப்ஸ் வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியாண் ரிக்கல்டன் மற்றும் வெண்டர் டூஷன் ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரியான் ரிக்கல்ட்டன் 27 ரன்களின் வெளியேற ஹென்றிச் கிளாசன் களத்திற்கு வந்து அதிரடி காட்டினார். வெண்டர் டூசன் ஜோடியை பிரிக்க முடியாமல்இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். கிளாசன் 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதில் 11 பௌண்டரிகள் அடங்கும்.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற வெண்டர் டூசன் 87 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 29.1 ஓவரில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்தை பிடித்தது. எனினும் அரையிறுதிக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்கள் உடல் தகுதியுடன் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஏற்கனவே டெம்பா பெவுமா மற்றும் தொடக்கவீரர் டோனி டிஷோர்சி ஆகியோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்ததால், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதனால் தற்காலிக கேப்டனாக ஏய்டன் மார்க்கரம் களமிறங்கினார். ஆனால் அவரும் பீல்டிங் செய்யும் போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யவே வரவில்லை. அதனால் அரை இறுதிக்கு முன்பு மூன்று வீரர்கள் உடல் தகுதியுடன் இல்லாதது தென்னாப்பிரிக்கா ரசிகர்களை சோகமடைய வைத்திருக்கிறது.