துபாய்: பாகிஸ்தான் அணியால் "இந்தியா பி" அணியை கூட வீழ்த்த முடியாது என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
முதலில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான், அடுத்து இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

போட்டியின் எந்த ஒரு இடத்திலும் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தவில்லை. போட்டி துவங்கியது முதல் இறுதி வரை இந்திய அணியின் ஆதிக்கமே நீடித்து இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் போதிய திறமையான வீரர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்து இருக்கிறார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசியதாவது: "இந்தியா பி அணி கூட நிச்சயமாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும். இந்தியா சி அணி வீழ்த்துமா? என என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்தியா பி அணி நிச்சயமாக பாகிஸ்தானை கடுமையாக வீழ்த்தி விடும். பாகிஸ்தான் அணியின் தற்போதைய ஃபார்ம் அந்த அளவில்தான் உள்ளது."
"பாகிஸ்தான் அணியில் ஏன் திறமையான வீரர்கள் அதிக அளவில் இல்லை? என்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. பாகிஸ்தானில் எப்போதும் இயற்கையிலேயே திறமையான வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் டெக்னிக்கலாக சரியாக விளையாட விட்டாலும் இயல்பிலேயே அவர்களுக்கு திறமை இருக்கும். அவர்கள் தங்கள் உள்ளுணர்வின் மூலம் பேட் மற்றும் பந்தை எப்படி அணுகுவது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள்."
"உதாரணத்திற்கு நாம் இன்சமாம் உல் ஹக்கை பற்றி கூறலாம். அவர் பேட்டிங் செய்யும் போது நிற்கும் முறையை நாம் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டோம். எந்த ஒரு இளம் வீரரும் அவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அவரைப் போல பேட்டிங் ஆட முயற்சி செய்யக் கூடாது. ஆனால், அவர் மிகச்சிறந்த பேட்டிங் அணுகுமுறையை வைத்திருந்தார். அதன் மூலம் எந்த ஒரு டெக்னிக்கல் பிரச்சனையையும் இன்சமாம் சமாளித்து விடுவார்."
"பாகிஸ்தானில் இதுவரை அதுபோன்ற திறமையாளர்களை ஏன் உருவாக்கவில்லை? என்பது எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் டி20 தொடரும் உள்ளது. இந்தியாவில் எப்படி தற்போது எத்தனை திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்? அதற்கு காரணம் ஐபிஎல் தான். ஐபிஎல் மூலம் உருவான வீரர்கள் ரஞ்சி டிராபி விளையாடி பின்னர் இந்திய அணிக்காகவும் விளையாடுகிறார்கள். பாகிஸ்தானில் இதில் ஏதோ ஒரு சிக்கல் உள்ளது. இது குறித்து அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஏன் இன்னும் அதிக அளவிலான திறமையான வீரர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? என்பதை பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்றார் சுனில் கவாஸ்கர்.