மும்பை: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமான அட்டவணை இல்லை. கிட்டத்தட்ட இதே அட்டவணையை தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் வெளியிடும் என தகவல் கூறப்படுகிறது. அந்த அட்டவணையில் உள்ள விவரங்களை இங்கே பார்க்கலாம்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் முதல் வாரம் வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தப்பட உள்ளன.

2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் எட்டு முக்கிய அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளன. அதன்படி முதல் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெறும்.
இரண்டாவது பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கும் ஒரு அணி மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இவ்வாறாக நான்கு அணிகளும் விளையாடி முடித்த பின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடருக்கான உத்தேச போட்டி அட்டவணையின்படி இந்த தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் இந்தியா ஆடும் மூன்று குரூப் சுற்று போட்டிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற உள்ளன என்ற விவரமும் கூறப்பட்டு உள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும், பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மார்ச் 2 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி குரூப் சுற்றுப் போட்டிகளில் விளையாடும்.
இந்த மூன்று போட்டிகளில் குறைந்த பட்சம் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 4 அன்று முதல் அரை இறுதியும், மார்ச் 5 அன்று இரண்டாவது அறை இறுதியும் நடைபெறும். மார்ச் 9 அன்று இறுதிப் போட்டி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி ரிசர்வ் நாளாக இருக்கும்.