துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் பாகிஸ்தானிலேயே அனைத்து போட்டிகளையும் நடத்த முயற்சித்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான முதற்கட்ட அட்டவணை ஐசிசி வசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூரில் நடத்தப்படும் என்று தெரிய வந்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பயணித்து இந்தியா அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் மத்திய அரசு இந்திய அணியின் பயணத்திற்கு அனுமதியளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பிசிசிஐ தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
இதனிடையே ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த முயற்சிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்திலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியாகும் என்பதால், கடைசி நேரத்தில் ஹைபிரிட் மாடலில் நடத்த வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டுமென்றால், மற்ற அணிகளின் நிர்வாகங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நிர்வாகங்கள் நிச்சயம் ஒப்புக் கொள்ளாது என்பதால், பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி தலைமை நிர்வாகி அலர்டைஸ் பேசுகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் இருந்து வெளியில் நடத்த எந்த திட்டமும் இல்லை.
இதற்கான தீர்வை கண்டறிய சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் தற்போதைய சூழலில், சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் மட்டும் நடத்தவே திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற முடிவு மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
இன்னும் சில கிரிக்கெட் விமர்சகர்கள், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட மட்டுமே இந்திய வீரர்களை அனுப்பலாம் என்றும், அம்ரிஸ்டரில் இந்திய வீரர்களை தங்க வைக்கலாம் என்றும் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனால் இந்திய அணி வீரர்களுக்கு தான் கூடுதல் சிக்கல் உருவாகும் என்றும் சிலர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படுகிறது. மேலும் ஐசிசி நிர்வாகியின் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.