மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகிறது. விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக வீரர் ஒருவரை ஒரு நாள் அணியில் சேர்த்து, அறிமுகம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடர்களில் ஆடும் அதே அணி தான் கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ-யின் தேர்வுக் குழு ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் மட்டுமே இது வரை விளையாடி உள்ளார். 2021 ஆம் ஆண்டில் அவர் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் மூன்று ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான டி20 தொடர்களில் வருண் சக்கரவர்த்தி பங்கேற்றார். அந்தத் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தி தேர்வு குழுவை ஈர்த்து இருக்கிறார் வருண். அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
அதே சமயம், அவருக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் பிசிசிஐ கவனமாக உள்ளது. வருண் சக்கரவர்த்தி இதற்கு முன் காயம் காரணமாகவே இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டால் அவரை விட சிறந்த சுழற் பந்துவீச்சாளரை தேர்வு செய்வது சிக்கலாக இருக்கும் என்பதால் அவரை பிசிசிஐ வல்லுனர் குழு கண்காணித்து வருகிறது.
தற்போது வருண் சக்கரவர்த்தி விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் அவர் இதுவரை 5 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 13.62 என்பதாக உள்ளது. சமீபத்தில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியும் இருந்தார்.
அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது உறுதி என்றால் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் அறிமுகம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கலாம்.