மும்பை: தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை பிசிசிஐ புறக்கணித்து உள்ளது. டி20 போட்டிகளில் விக்கெட் வேட்டையாடி வந்த அவருக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
வருண் சக்கரவர்த்தி பேட்டிங் ஆல் ரவுண்டர் இல்லை என்பதால் தான் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய ஒருநாள் அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம் பெற்று இருந்தது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயமாக அக்சர் பட்டேலுக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீரர்கள் பட்டியலில் அக்சர் பட்டேலின் பெயர் பந்துவீச்சாளர்களிலேயே முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் மாற்று சுழற் பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணியில் நீண்ட காலத்திற்கு பின் இடம் பெற்று மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். தென்னாப்பிரிக்காவிலும் கூட அவர் தனது மிஸ்டரி ஸ்பின் பந்துவீச்சால் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆனால், அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
வருண் சக்கரவர்த்தி முழு நேர சுழற் பந்துவீச்சாளர் ஆவார். பேட்டிங்கில் வருண் சக்கரவர்த்தியால் பெரிதாக கை கொடுக்க முடியாது. அதுவே அவருக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது. ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுமே பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத போதும், வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் பங்கேற்க உள்ளார். இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர் ஜனவரி 22 அன்று தொடங்க உள்ளது.