மும்பை: இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் வருண் சக்கரவர்த்தி அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். தொடர்ந்து விக்கெட் வேட்டையாடி வருகிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் டி20 தொடரில் அவர் இதுவரை நான்கு பொட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
அவர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய அணியில் இடம் பிடித்து டி20 போட்டிகளில் ஆடத் துவங்கினார். அதற்கு முன் 2021இல் தான் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். அப்போது முதல் இதுவரை 11 போட்டிகளில் 29 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த 11 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே அவர் விக்கெட் வீழ்த்தாமல் இருந்துள்ளார். விக்கெட் வீழ்த்தாத போட்டியிலும் கூட அதிக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை.

இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா என மூன்று நாடுகளில் உள்ள மைதானங்களிலும் ஒரே மாதிரியாக விக்கெட்களை அள்ளி இருக்கிறார். இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. அந்த மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் அந்த தொடருக்கான் ஒருநாள் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பிடித்து உள்ளனர். அந்த அணியில் மாற்றங்கள் செய்வதற்கு கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக விக்கெட்களை வீழ்த்தி வருவதால் அவரால் துபாய் ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்ற கருத்து உள்ளது.
எனினும், பிசிசிஐ கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் மாற்றம் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள அதே இந்திய அணி தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அப்போது குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்து ஆட வைத்து பரிசோதனை செய்து பார்க்கலாம். ஆனால் அந்த முடிவு எடுக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது.