மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் ஐசிசி இன்னும் அட்டவணையை வெளியிடவில்லை. இதற்கு காரணம் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி பிரச்சனையை கிளப்பி வருவதால் தற்போது மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் டாப் எட்டு இடங்கள் இருக்கும் அணி பங்குபெறும். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொடர் மீண்டும் நடைபெறுகிறது.

இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்த தருணத்தில் இந்த தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டேன் என்று இந்தியா அறிவித்து விட்டது. மேலும் தங்களுக்கு ஹைபிரிட் முறைப்படி போட்டியை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்றும் பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது.
இந்த தருணத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனி தாங்களும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் விளையாட மாட்டோம். தங்களுக்கும் ஹைபிரிட் மாடல் முறை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் இதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவில்லை.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், விராட் கோலியும் இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட பேராசையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் பாகிஸ்தானில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட ஆசைப்படுவதை விட விராட் கோலியும், இந்திய அணியும் தான் இங்கு வர ஆசையில் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு விராட் கோலி நீண்ட நாளாக காத்திருக்கிறார். நான் இந்திய கிரிக்கெட் மற்றும் பிசிசிஐ கீழ் கிரிக்கெட் வர்ணனையாளராக பணி புரிந்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு மட்டும் இந்திய அணி வந்து விளையாடினால் அவர்களுடைய தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றில் கோடிகள் புரளும். ஆனால் இந்திய அரசுதான் தங்களது அணியை பாகிஸ்தானுக்கு விட மறுக்கிறது என்று சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.