மும்பை: இந்திய அணி வீரர்கள் அனைவரும் இனி உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது. உள்ளூர் போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படாது எனவும் கூறி இருந்தது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் தாங்கள் ரஞ்சி டிராபி தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் விளையாட முடியாது என பிசிசிஐ-க்கு தெரியப்படுத்தி உள்ளனர். விராட் கோலிக்கு கழுத்தில் வலி இருப்பதால் விளையாட முடியாது என தெரிவித்து இருக்கிறார்.

பிசிசிஐ மருத்துவக் குழுவிடம் அவர் இந்த தகவலை கூறி உள்ளார். கே எல் ராகுலுக்கும் முழங்காலில் வலி இருப்பதால் அவரால் விளையாட முடியாது என மருத்துவக் குழுவிடம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளனர்.
அந்தத் தொடருக்கு முன் இரண்டு ரஞ்சி ட்ராபி போட்டிகள் நடைபெறும். அதில் முதல் போட்டியில் கோலி, ராகுல் என இருவரும் விளையாட மறுத்து உள்ளனர். ஒரு வீரருக்கு காயம் இருந்தால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்கள் இருவரும் முதல் சுற்றுப் போட்டியில் விளையாடப் போவதில்லை.
அதே சமயம் மற்ற டெஸ்ட் அணி வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் மாநில அணிகளில் இடம் பெற்று விளையாட உள்ளனர்.