மும்பை: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி விரைவில் துபாய்க்குப் பயணிக்கவுள்ளது. இம்முறை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, வீரர்கள் தங்களது மனைவி, குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்களை சர்வதேச போட்டிகளின்போது தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி இல்லை.
பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்திய பிறகு, இந்திய அணி பங்கேற்கும் முதலாவது வெளிநாட்டுத் தொடர் இதுவாகும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல அனுமதி கோரி மூத்த வீரர் ஒருவர் பிசிசிஐ-ஐ அணுகியுள்ளார்.

இருப்பினும், பிசிசிஐ அவரது கோரிக்கையை உடனடியாக நிராகரித்துள்ளது. இந்த விதி அனைத்து வீரர்களுக்கும் பொதுவானது என்றும், யாருக்கும் இதில் விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும் பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அந்த மூத்த வீரர் விராட் கோலி தான் என ஒரு பேச்சும் உள்ளது.
பிசிசிஐ-ன் புதிய விதிமுறைகளின்படி, வெளிநாட்டுப் போட்டித் தொடர் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் மட்டுமே வீரர்கள் தங்களது குடும்பத்தினரை மூன்றாவது வார இறுதியில் அழைத்துச் செல்லலாம். அவ்வாறு அழைக்கும் பட்சத்தில், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் உடன் தங்கலாம். ஒருவேளை, விதிவிலக்காக யாரேனும் வீரர் தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கினால், அதற்கான செலவுகள் அனைத்தையும் அந்த வீரரே ஏற்க வேண்டும்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் வீரர்களின் கவனத்தை சிதறாமல் விளையாட்டில் மட்டும் செலுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் வீரர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தாலும், அணியின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இது அவசியம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதே சமயம், விராட் கோலி போன்ற சில வீரர்களுக்கு இது அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.