துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலமாக உலகிலேயே மாபெரும் சாதனை செய்திருக்கிறார். ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் விராட் கோலி இதுவரை ஐந்து முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்று இருக்கிறார்.
வேறு எந்த அணியை சேர்ந்த ஒரு வீரரும் குறிப்பிட்ட ஒரே அணிக்கு எதிராக ஐசிசி தொடர்களில் மூன்று முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக இந்திய அணி சேசிங் செய்தபோது விராட் கோலி நங்கூரமிட்டு ஆடினார். ரோஹித் சர்மா 20 ரன்கள், சுப்மன் கில் 46 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் விராட் கோலி நிதானமாக விளையாடி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியையும், தனது 51-வது ஒருநாள் போட்டி சதத்தையும் நிறைவு செய்தார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணியை சந்திப்பது என்றாலே விராட் கோலி உற்சாகமடைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை இது உணர்த்துகிறது.
இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடக்கும் சர்வதேசத் தொடர்களில் விராட் கோலி எந்தெந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுகளை வென்றார் என்ற பட்டியல்:
78*(61) - கொழும்பு - 2012 டி20 உலகக் கோப்பை
107(126) - அடிலெய்டு - 2015 ஒருநாள் உலகக் கோப்பை
55*(37) - கொல்கத்தா - 2016 டி20 உலகக் கோப்பை
82*(53) - மெல்போர்ன் - 2022 டி20 உலகக் கோப்பை
100*(111) - துபாய் - 2025 சாம்பியன்ஸ் டிராபி