துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் துவங்க உள்ளது. இந்தத் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்திய ரசிகர்களாகிய நாம் அனைவரும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில் எந்த அணிக்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதைப் பற்றி ஒரு சிறிய ஆய்வு மேற்கொள்வோம்.
முதலில், இந்த எட்டு அணிகளில் எந்த அணிகளுக்குக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்பதைப் பட்டியலிடலாம். வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

வங்கதேசம்: வங்கதேசம் அணி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டுள்ளது. எனவே, அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் வியக்கத்தக்க வகையில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஃபார்முடன் அரை இறுதி வரை கூட ஆப்கானிஸ்தான் முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லுமா என்பது சந்தேகமே. இறுதிப் போட்டி போன்ற நாக் அவுட் போட்டிகள் ஒரு அணியின் மனநிலையை பெருமளவில் சோதிக்கும். அந்த சோதனையை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே, அந்த அணி இறுதிப் போட்டி மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
இங்கிலாந்து: கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையை வைத்திருந்தாலும், 2023 உலகக் கோப்பையில் சொதப்பியதைப் போலவே அதற்குப் பின் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணி சொதப்பி வருகிறது. சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராகவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று மூன்றிலும் தோல்வி அடைந்தது. எனவே, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
இந்தியா: அடுத்து, இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. சமீபத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பலமாகவே உள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி ஆடப் போகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அவர்களுடன் சுப்மன் கில்லும் குவிந்தால் அது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும். ஒருவேளை அவர்களால் ரன் குவிக்க முடியாமல் போனாலும் கூட ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல் என மிடில் ஆர்டரில் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இருப்பது மட்டுமே இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சில் இந்திய அணி நிச்சயம் பலவீனமாகவே உள்ளது. அந்த ஒரு இடம் தான் இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
பாகிஸ்தான்: அடுத்து, தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. கடைசியாக நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணி எப்போதும் எதிர்பாராத ஆட்டத்தை ஆடக்கூடிய அணி என்பதாலும், சொந்த மண்ணில் விளையாடுவதாலும் அந்த அணிக்குச் சாதகங்கள் உள்ளன. சமீபத்தில் அந்த அணி வெற்றி தோல்விகளை கலந்து சந்தித்து இருந்தாலும், இந்த சாதகங்கள் அந்த அணிக்கு உதவும்.
தென்னாப்பிரிக்கா: அடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமீப காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த அணிகள் இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பதால் அந்த அணி இந்த முறை அதிக முயற்சியை எடுக்கும். 2024 டி20 உலகக் கோப்பைகளிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்தது அந்த அணி.
நியூசிலாந்து: நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்று இருக்கிறது. எனவே, அந்த உற்சாகத்துடன் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளில் முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணி நிச்சயம் மிக பலவீனமாக உள்ளது. 2023 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி இப்போது இல்லை. முக்கிய வீரர்கள் 5 பேர் அணியில் இடம் பெறவில்லை. பந்துவீச்சு முற்றிலும் புதியதாக மாறிவிட்டது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகி இருக்கிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறாத இலங்கை அணியிடம் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்தது
ஆனால், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கிரிக்கெட் அதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது அந்த அணி எத்தனை பெரிய தோல்வியிலிருந்தும் மீண்டு வந்ததை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். எனவே, ஆஸ்திரேலியா குரூப் சுற்றில் சிறப்பாக செயல்பட்டால் அதன் பின் நாக் அவுட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த எட்டு அணிகளில் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ள அணிகள் - இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா / ஆப்கானிஸ்தான். இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடினால் நிச்சயமாக கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த ஆய்வின் மூலம், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது நிச்சயமற்றதாக இருந்தாலும், இந்திய அணி தனது பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாகப் பயன்படுத்தி விளையாடினால், கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.