மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இந்த தொடரில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷித் ரானா, ஹர்திக் பாண்டியா ஆகியவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஆர்ஸ்தீப் சிங், இந்திய அணிக்காக வெறும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை ஆர்ஸ்தீப் சிங் வீழ்த்தினாலும், இன்னும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வர்ணனையாளர் டேவிட் லயார்ட், பும்ராவை இந்திய அணி மிகவும் மிஸ் செய்யும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், உலகின் மிகச்சிறந்த பவுலரான பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை என்றால் உங்கள் அணிக்கு நிச்சயம் அது பிரச்சனை தான். தற்போது ஆர்ஸ்தீப் சிங் அணியில் இருக்கின்றார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் அவருடைய பந்துவீச்சை அதிரடியாக விளையாட முயற்சி செய்வார்கள். இது ஒன்றும் டி20 கிரிக்கெட் கிடையாது.
அது சின்ன பார்ட்டி தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்து ஓவர் நீங்கள் வீச வேண்டும். அதற்கு அவர் பழகியவர் போல் எனக்குத் தோற்றவில்லை என்று லயார்ட் கூறியுள்ளார். ஆர்ஸ்தீப் சிங் இதுவரை 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடைசியாக இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற ஆர்ஸ்தீப் சிங் 5 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார்.
ஒரு பிரதான வேக பந்துவீச்சாளராக இருந்த ஆர்ஸ்தீப் சிங் வெறும் ஐந்து ஓவர்கள் தான் வீசி இருந்தார் என்பது உண்மையிலேயே, ஒரு நாள் போட்டிக்கு சரிப்பட்டு வருவாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனால் ஆர்ஸ்தீப் விஜய் ஹசாரே, ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் பும்ராவின் இடத்தை நிரப்ப அவர் முயற்சி செய்வார்.