மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டுள்ளார். முதலில் அறிவிக்கப்பட்டிருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணியில் அவர் இடம் பிடித்திருந்தார். ஆனால், தற்போது அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்திய அணி நிர்வாகம் ஜெய்ஸ்வாலை கடந்த இரண்டு வாரங்களாக மோசமாக நடத்துவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு முன் ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் மட்டுமே இடம் பிடித்திருந்தார். ஒருநாள் அணியில் அவர் இதுவரை விளையாடியதில்லை. டெஸ்ட் அணியில் அடுத்த பெரிய நட்சத்திர வீரர் என பல நாடுகளை சேர்ந்த ஜாம்பவான்களும் அவரை பற்றி பேசி உள்ளனர்.

இந்த நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஒருநாள் அணியில் அவரை சேர்த்தது பிசிசிஐ. இதற்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனைதான் எனக் கூறப்படுகிறது. அவர்கள் அவரை துவக்க வீரராக பயன்படுத்த விரும்பியுள்ளனர்.
ஆனால், அதைச் செய்தால் அணியின் பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கும் என்ற நிலை இருந்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் தங்களின் பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டால் மட்டுமே ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற முடியும் என்ற சிக்கல் இருந்தது. அப்படி இருந்தும் ஜெய்ஸ்வால் முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவே ஜெய்ஸ்வாலின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும். தனது அறிமுக போட்டியில் அவர் 22 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு அடுத்த போட்டியில் விராட் கோலி அணியில் விளையாடியதால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரிசர்வ் வீரராக கூட அவர் அறிவிக்கப்படவில்லை. ஜெயஸ்வாலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒருவேளை ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அல்லது ஒரு ஆல்ரவுண்டரை தேர்வு செய்திருந்தால் கூட அந்தத் தேர்வை நியாயப்படுத்த முடியும். ஆனால், ஏற்கனவே நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும் நிலையில், அவர்களின் ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்த்திருக்க வேண்டும்.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் துவக்க வீரரான ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சுழற்பந்து வீச்சாளருக்காக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்படுகிறார் என்றால், இந்திய அணியில் அவருக்கான தேவை இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி ஒரு வீரர் தேவையே இல்லை என்றால், எதற்காக அவரை அவசர கதியில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்ய வேண்டும்? பின்னர் ஒரே ஒரு போட்டி மட்டும் ஆட வைத்துவிட்டு அணியிலிருந்து நீக்க வேண்டும்? இதன் மூலம் ஒரு இளம் வீரருக்கு தவறான நம்பிக்கை அளிக்கப்பட்டு இருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.